ராஞ்சி: தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில், இந்தியா சி அணி 136 ரன் வித்தியாசத்தில் இந்தியா பி அணியை வீழ்த்தியது. ராஞ்சியில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா சி அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 280 ரன் குவித்தது. கில் 1, அன்மோல்பிரீத் 23, கார்க் 18, சூரியகுமார் 10, தினேஷ் கார்த்திக் 34 ரன்னில் பெவிலியன் திரும்பினர். அக்சர் பட்டேல் 98 ரன் (61 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்), விராத் சிங் 76 ரன்னுடன் (96 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அடுத்து களமிறங்கிய இந்தியா பி அணி 43.4 ஓவரில் 144 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜெய்ஸ்வால் 28, கெயிக்வாட் 20, அபராஜித் 53 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். இந்தியா சி பந்துவீச்சில் மார்கண்டே 4, போரெல், சக்சேனா தலா 2, பதானியா, அக்சர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். லீக் சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த இந்தியா சி (8 புள்ளி), இந்தியா பி (4 புள்ளி) அணிகள் நாளை மீண்டும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்தியா ஏ அணி (0) வெளியேற்றப்பட்டது.